உரிமைக்குரல்: மலாலாவின் போராட்டக் கதை
உரிமைக்குரல்:
மலாலாவின் போராட்டக் கதை - மருதன் எதற்காக மலாலாவைப் பற்றி இன்னொரு புத்தகம்? மலாலாவைப் பற்றி உண்மையிலேயே நமக்குத் தெரியாதது ஏதாவது இன்னும் பாக்கியிருக்கிறதா? தாலிபனால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் நீந்திக்கிடந்த தருணம் தொடங்கி, நோபல் பரிசையும் மேற்குலகின் முழுமையான அரவணைப்பையும் பெற்று புகழ் வெளிச்சத்தில் நீந்திக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் வரையிலான மலாலாவின் வாழ்க்கை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால், அரசியல் சமூகப் பின்னணியில் பொருத்தி மலாலாவை ஆராய்ந்தால்தான் அவரைப் பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டை நம்மால் உருவாக்கிக்கொள்ளமுடியும். அதற்கு மூன்று நிலப்பரப்புகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். முதலாவது, மலாலாவின் தாயகமும் தாலிபனின் இருப்பிடமுமான ஸ்வாட் பள்ளத்தாக்கு. அடுத்து, மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்கிவிட்டு, அடையாளமின்றித் தவிக்கும் பாகிஸ்தான். மூன்றாவதாக, மலாலாவுக்கு அடைக்கலம் தந்து ஆதரிக்கும் மேற்குலகம். தாலிபனால் சுடப்பட்டார் என்பதல்ல மலாலாவின் சாதனை. ஒரு பள்ளி மாணவியாக இருந்து நோபல் விருது பெற்றார் என்பதல்ல அவர் அடையாளம். உயிர்த்தெழுந்தபிறகு அவர் என்னவாக மாறினார் என்பதிலும் எப்படி மாறினார் என்பதிலும்தான் அவருடைய முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. பெண் கல்விக்கு ஆதரவாக ஒலித்த மலாலாவின் குரல், தவிர்க்க இயலாதபடிக்கு பிற்போக்குத்தனத்துக்கும் மதவாதத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிரான குரலாகவும் மாறியபோது மலாலாவின் ஆளுமை அவர் வயதைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்து நின்றது. அந்த உரிமைக்குரலைக் கவனமாகச் சேகரித்து எடுத்துப் பதிவு செய்திருக்கிறது இந்தப் புத்தகம். குங்குமம் தோழி இதழில் வெளிவந்து கவனம் பெற்ற தொடரின் நூல் வடிவம் இது. |