காலமெல்லாம் கண்ணதாசன்
காலத்தால் அழியாத திரைப் பாடல்களைத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். வாழ்வின் எல்லா திசைகளிலும் பயணித்தது அவரது தமிழ். பாடல் எனும் வடிவத்தின் வழியாக தமிழர்களின் நெஞ்சங்களில் இனிமை சேர்த்த கவியரசரின் சுவை மிகுந்த பாடல்களைத் தொட்டுத் தொடரும் கட்டுரைகளாகப் படைத்திருக்கிறார் ஆர்.சி.மதிராஜ்.
ஒரு காலத்தில் திரைப்படப் பாடல்களை தமிழர்கள் கொண்டாடினார்கள். ஆரவாரமான வரவேற்பைப் பெற்ற அந்தக்கால திரையிசைப் பாடல்களின் வழியே மக்கள் தங்கள் வாழ்வின் நொடிகளை இணைத்து இணைத்துப் பார்த்து மகிழ்ந்தார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் - அந்த திரையிசைப் பாடல்களில் இருந்த இனிமையான தமிழ்தான். அதை தனது சீரிளம் தமிழால் மிளிர வைத்தவர் கவியரசர் கண்ணதாசன். மொழியை மிக எளிமையாக, பாமரனுக்கும் புரிகிற வடிவில் பாடல் வழியே புகுத்தியவர் கவியரசர். ஒரு திரைப்படம் சொல்ல வந்த கருத்தை உள்வாங்கிக்கொண்டு, காட்சிக்கு ஏற்ப தனது வரிகளால் அலங்கரித்தவர். கதையோடு உறவாடும் மொழியை தனக்கென வரித்துக்கொண்டு அந்த நுட்பத்தின் மூலம் உச்சம் தொட்ட சாதானையாளர் அவர். ‘தென்றல் நடந்து போனதற்கு சுவடா உண்டு?’ என்று கவிதையில் பொழியும் அவரால்தான்... ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த தென்றலே’ என்று பாச மலரால் தோரணம் கட்டவும் முடியும். இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டியும் திரையிசைப் பாடல்களின் வழியே கண்ணதாசன் வாழ்வார் என்பதற்கு இந்த நூலும் சிறு ஆவணமாக அமையும்.