இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு
முன்பு வருவது மாலை - ஆதவன் சராசரி மனிதர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளை ஆதவனைக் காட்டிலும் நேர்த்தியாகக் கையாண்டவர்கள் கிடையாது. வாழ்வின் ருசிகரமான, உணர்ச்சிகள் ததும்பி வழியும் கணங்களை அறிவின் தளத்தில் பரிசீலித்து, அதே சமயம் பயமுறுத்தல்கள் இல்லாமல் வெளிப்படுத்துவதில் அவர் சமர்த்தர். ஆதவன் நூல் வரிசையில் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் முதல் நூல் இது. அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவனின் முதல் நூலும் இதுவே. வேறெந்தத் தொகுப்புகளிலும் இடம்பெறாத அவரது பெண், தோழி, தலைவி என்னும் குறுநாவலுடன் சேர்த்து மொத்தம் ஆறு குறுநாவல்கள் இதில் உள்ளன.அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி நம் தலைமுறையின் அபூர்வ படைப்பாளியான ஆதவனும் 45 வது வயதில் அகால மரணமுற்றது தமிழ் இலக்கிய உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு. 1965 வாக்கில் 'தீபம்', 'கணையாழி'யில் எழுதத் தொடங்கிய அவர் மிகக் குறுகிய காலத்தில் தனித்தன்மை கொண்ட சாதனைகளை தமிழ்ப் படைப்புலகில் நிகழ்த்தி தனக்கென ஒரு அழியாத இடத்தை வாசகர் நெஞ்சில் பிடித்துக்கொண்டவர். |